சென்னை: ஐ.ஐ.டி யில் 60 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த பொதுப் பாதை அடைக்கப்பட்டதற்கு கண்டனம் எழுந்திருக்கிறது. இதனை கண்டித்து தற்போது வேளச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை ஐ.ஐ.டி. பிரதான நுழைவுவாயில் சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் இருக்கிறது. அதற்கு நேர் எதிரே இருக்கக்கூடிய பின்புறம் வேளச்சேரி பகுதியில் கிருஷ்ணா கேட் என்ற ஒரு கேட் செயல்பட்டு வருகிறது. இந்த கேட் கடந்த 60 ஆண்டுகளாக, குறிப்பாக இந்த மக்களின் பயன்பாட்டிற்காக இருந்திருக்கிறது. இந்த கிருஷ்ணா கேட் பகுதிக்கு அருகிலேயே மாணவர் மற்றும் மாணவியரின் விடுதி இருந்திருக்கிறது. இந்த மாணவர்களும் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பள்ளிகள் மற்றும் கோவில்களுக்கு பொது மக்கள் வந்து செல்லக்கூடிய பாதையாக இருந்து வருகிறது. கடந்த 24ம் தேதி எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் இந்த பாதை மூடப்பட்டதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.