தூத்துக்குடியில் போலீஸ் வேனில் ஏறி டிக்டாக் வீடியோ வெளியீடு 3 பேருக்கு நூதன தண்டனை

தூத்துக்குடி:   தூத்துக்குடி பகுதியில் கடந்த இரு நாட்களாக ஒரு டிக்-டாக் வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில் தூத்துக்குடியை சேர்ந்த 2 ‘புள்ளிங்கோ’ வாலிபர்கள் போலீஸ் வேன் முகப்பில் ஏறி நின்று கொண்டு, சினிமா பஞ்ச் டயலாக்பேசி கழுத்தை அறுப்பதுபோல சைகையில் கூறி வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோவை  ‘‘டிக்-டாக்’’ செயலியில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி ஆயுதப்படைக்கு சொந்தமான ஆயுதப்படை வாகனம் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி அருகே நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டிருந்தது. அதில்  யாரும் இல்லாத நேரத்தில் 2 வாலிபர்கள் ஏறி டிக் - டாக்கிற்காக நடித்துள்ளனர். இதனை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார் என்பது தெரியவந்தது.

இருவரும் முகம் தெளிவாக தெரிந்ததையடுத்து, விசாரணையில் இருவர் லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் என்பதும், ஒருவர் முனியசாமிபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் என கண்டுபிடிக்கப்பட்டு இரவோடு இரவாக வீட்டுக்கே சென்று போலீசார் மடக்கினர். இருவர் 17 வயதுகுட்பட்டவர்கள் என்பதால் நூதன தண்டனை வழங்க முடிவு செய்து 3 பேரையும் டிராபிக் போலீசாருடன் அனுப்பி, நேற்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் சிக்னலில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தினர். பின்னர் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Related Stories: