புவனகிரி: கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கான மறுவாக்கு எண்ணிக்கை பிடிஓ மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் நடந்து வருகிறது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் பல முறைகேடுகள் நடந்ததாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சி.சாத்தமங்கலம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அருள்பிரகாசம் என்பவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை எனக்கூறி கடந்த 2ம்தேதி வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அந்த வாக்கு எண்ணிக்கையை இன்று நடத்தி முடிவுகளை அறிவிக்க மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டிருந்தார்.