புனே: விமானங்களில் பயணிகளுக்கு அளிக்கப்படும் காபி, டீயுடன் சர்க்கரைக்கு பதிலாக தேன் பாக்கெட் வழங்கலாம் என்று மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தி உள்ளார். புனேயில் நேற்று நடந்த மத்திய தேன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் நிகழ்ச்சியில் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: விமானங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் காபி, டீயில் சேர்த்துக் கொள்ள சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை அல்லது சர்க்கரைக் கட்டி வழங்கப்படுகிறது. மூன்று தேக்கரண்டி சர்க்கரையானது, ஒரு தேக்கரண்டி தேனுக்கு சமமானது. இதை மனதில் கொண்டு விமானங்களில் பயணிகளுக்கு சர்க்கரைக்கு பதிலாக தேன் பாக்கெட் அல்லது தேன் கட்டியை வழங்கலாம். ஏர்இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் கோஏர் நிறுவன தலைவர்களுடனும், காதி கிராமயுத்யோக் ஆணைய தலைவருடனும் இதுதொடர்பாக வலியுறுத்தி உள்ளேன். அதேசமயம், பயணிகள் எதை விரும்புகிறார்களோ அதை கொடுக்கலாம் என்றும் கூறியுள்ளேன்.