புதுடெல்லி: ஜேஎன்யு மாணவர்களை மர்ம கும்பலை ஏவிட்டு தாக்கியதே காங்கிரசும், கெஜ்ரிவாலும்தான்,’ என மத்திய உள்துறை இணையமைச்சர் ராய் குற்றம்சாட்டி உள்ளார். தேசிய குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பாஜ சார்பில் டெல்லியில் நேற்று அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. இதில், மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய், பாஜ மூத்த தலைவர் விஜய் கோயல் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதில், நித்தியானந்த் ராய் பேசியதாவது:சட்டம் ஒழுங்கின் மீது பாஜ நம்பிக்கை வைத்துள்ளது. பாஜ.வின் எந்தவொரு தொண்டரோ அல்லது தலைவரோ வன்முறையை தூண்டுவது கிடையாது. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியினரும், முதல்வர் கெஜ்ரிவாலும் மட்டுமே, பல்கலை. மாணவர்கள், பேராசிரியர்கள் மீது மர்ம நபர்களை ஏவி விட்டு தாக்குதல் நடத்தி இருக்கக் கூடும். ஜேஎன்யு மாணவர்கள் மீதான வன்முறை, எதிர்க்கட்சியினரின் திட்டமிட்ட சதி. மாணவர்களே இந்தியாவின் எதிர்காலம். எனவே, அவர்களை தவறாக வழி நடத்த வேண்டாம் என்று காங்கிரசாரையும், முதல்வர் கெஜ்ரிவாலையும் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.