ராஜபாளையம்: ராஜபாளையத்தில் சாதாரண மழைக்கே சாலையில் தண்ணீர் தேங்கி அலங்கோலமாக காணப்படுகின்றன. ராஜபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு லேசான மழை பெய்தது. சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருந்து வருகிறது. ராஜபாளையம் தென்காசி மதுரை சாலை, தேசிய நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சாலைகள், நகராட்சி சாலைகளில் பல ஆண்டுகளாக சரிவர பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் லேசாக மழை பெய்யும் காலங்களில்கூட சாலைகளில் தண்ணீர் தேங்கி அப்புறப்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது. பிரதான சாலைகளில் போதிய வாறுகால் வசதி இல்லாத காரணத்தினாலும், அரசு அதிகாரிகளின் மெத்தன போக்காலும் பொதுமக்களும் பள்ளி மாணவ, மாணவிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.