ஓட்டு போடலையே... பணத்தை திருப்பிக்கொடு! வேட்பாளர் ரகளையால் பொதுமக்கள் அதிர்ச்சி

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பூசை. ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால் இவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். இதனால் பூசை கடும் மன வேதனை அடைந்தார். இதனால் அவர் நேற்று மதியம் தனது கிராமத்தில் உள்ள கடைத்தெருவில் நின்று கொண்டு ரகளையில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த சிலரை பார்த்து, ‘என்னிடம் பணம் வாங்கிக்கொண்டு, வேறு நபருக்கு வாக்களித்தீர்களா? எனது பணத்தை திருப்பி கொடுங்கள்’ எனக்கூறி  மிரட்டல் விடுத்ததுடன், பீர்பாட்டில், செங்கல்லை எடுத்து வீசியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் மிரட்டல் விடுத்த பூசை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி செங்கம்- இளங்குன்னி சாலையின் குறுக்கே மின்கம்பத்தை போட்டு மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த மேல்செங்கம் இன்ஸ்பெக்டர் மலர், சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், ரகளையில் ஈடுபட்ட பூசையை அழை த்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என  போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: