சென்னை: வடகிழக்கு பருவமழையால் நிறுத்தி வைக்கப்பட்ட குடிமராமத்து பணிகளை மார்ச் 31க்குள் முடிக்க வேண்டும் என்று அரசு செயலாளர் மணிவாசன் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ₹499.69 கோடியில் நடக்கும் 1,829 ஏரிகள் புனரமைப்பு பணிக்கு கடந்த ஜூன் மாதம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் சங்கம், ஆயக்கட்டுதாரர்கள் மூலம் இப்பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இப்பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் சார்பில் சங்கங்கள், ஜிஎஸ்டி கணக்கு பதிவு செய்வதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் உடனடியாக பணியை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், பணிகளை தொடங்கிய விவசாயிகளுக்கு நிதியை விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த பருவமழை காரணமாக குடிமராமத்து திட்டப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.