தோல்வியடைய செய்தது ஏன்? பணத்தை திருப்பி தரக்கோரி ரகளை செய்த வேட்பாளர்: பாதுகாப்பு கேட்டு கிராம மக்கள் மறியல்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பூசை. இவர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனால் வேதனையடைந்த பூசை நேற்று மதியம் கிராமத்தில் உள்ள கடைத்தெருவில் நின்று  ரகளையில் ஈடுபட்டார். அப்போது அவர், ‘என்னிடம் பணம் வாங்கிக் கொண்டு, வேறு நபருக்கு வாக்களித்தவர்கள் பணத்தை திருப்பி தாருங்கள்’ எனக்கூறி கிராம மக்களை பார்த்து மிரட்டல் விட்டதுடன், பீர்பாட்டில், செங்கல்லை எடுத்து வீசியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தி செங்கம்- இளங்குன்னி சாலையின் குறுக்கே மின்கம்பத்தை போட்டு திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த மேல்செங்கம் போலீசார் வந்து ரகளையில் ஈடுபட்ட பூசையிடம், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து அனுப்பினர். தேர்தலில் தோற்ற வேட்பாளர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: