அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் காவல் நிலையம் அருகே தனியார் ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் நேற்று அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. ஓட்டலின் ஒரு அறையில் தூங்கிக்கொண்டு இருந்த ஊழியர்கள் திடுக்கிட்டு எழுந்து, வெளியே ஓடிவந்தனர். தகவலறிந்து ஜெ.ஜெ.நகர் தீயணைப்புத்துறை முதன்மை அலுவலர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்தனர். இதையடுத்து ஓட்டலுக்குள் யாரேனும் சிக்கியுள்ளார்களா என தீயணைப்பு வீரர்கள் தேடினர். அப்போது, ஓட்டல் சமையல்காரர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வெனிட் சகாயம் (26), கழிவறை அருகே பலத்த தீக்காயங்களுடன் இறந்து கிடப்பது தெரிந்தது. அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.