சென்னை: திருவள்ளூர், நாகை, கிருஷ்ணகிரி உட்பட 3 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க 1089 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான கட்டுமானத்தை 18 மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் வரும் 2021-2022ம் நிதியாண்டில் 75 புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதைதொடர்ந்து அந்தந்த மாநில அரசுகள் சார்பில் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்பி வைக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. தற்போது கூடுதலாக தமிழகத்தில் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, மற்றும் நாகை 3 மருத்துவக்கல்லூரி உடன் கூடிய மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. அதன்படி, 195 கோடி மத்திய அரசும், 325 கோடி மாநில நிதியிலும் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் பெரும்பாக்கத்தில் 21.42 ஏக்கரில் 385.63 கோடி செலவில் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூரில் 60 ஏக்கரில் 366.85 கோடி செலவில் மருத்துவ கல்லூரி உடன் கூடிய மருத்துவமனை, கிருஷ்ணகிரி மாவட்டம் பொல்லப்பள்ளியில் 25 ஏக்கரில் ₹336.95 கோடியில் மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.