புழல், கன்னடப்பாளையத்தில் மனநலம் பாதித்த சிறுமிக்கு தொல்லை: எலக்ட்ரீஷியன் கைது

புழல்: புழல் கன்னடப்பாளையத்தில் மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எலக்ட்ரீஷியன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். புழல், கன்னடப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. தாய் இறந்துவிட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டார். இதனால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சிந்தாமணி (52).  எலக்ட்ரீஷியன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக வீட்டில் சிறுமி தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த எலக்ட்ரீஷியன் சிந்தாமணி தனது வீட்டில் இட்லி சாப்பிட வருமாறு சிறுமியை அழைத்துள்ளார்.

பின்னர் சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது தந்தையிடம் சிறுமி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் புழல் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது சிறுமிக்கு சிந்தாமணி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் சிந்தாமணியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: