ஆலந்தூர்: மடிப்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மடிப்பாக்கம் கார்த்திகேயபுரத்திற்கும், அய்யப்பன்நகருக்கும் இடையே சுமார் 100 ஏக்கர் பரப்பலவில் ஏரி உள்ளது. இந்த ஏரி ஆக்கிரமிப்பாளர்களால் சுருங்கி தற்போது 65 ஏக்கர் அளவில் உள்ளது. மடிப்பாக்கம், மூவரசன்பட்டு, உள்ளகரம், புழுதிவாக்கம் போன்ற பகுதி மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கிய இந்த ஏரி சென்னை நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பலகோடி செலவில் தூர்வாரப்பட்டு வந்தது. ஆனால் சரிவர பணி முடிவு பெறாத நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்காக நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் துவங்கப்படவில்லை.
இந்நிலையில் அண்மையில் பெய்த மழையினால் இந்த ஏரி ஓரளவிற்கு நிரம்பியது. தற்போது இந்த ஏரியில் சாக்கடை நீர் கலந்து பச்சையாக மாறி துர்நாற்றம் வீசி கொண்டிருக்கிறது. காரணம், மடிப்பாக்கம் மற்றும் பல்லாவரம் நகராட்சி பகுதியில் இருந்து வெளிவரும் சாக்கடை நீர் கழிவுகள் ஏரியில் கலக்கிறது.