சென்னை: ரயிலில் ஏற்படும் குறைபாடுகளை ஜனவரி 1ம் தேதி முதல் 139, 182 எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்களில் பயணம் செய்யும் போது ரயில்கள் மற்றும் ரயில்நிலையங்களில் ஏதேனும் பொதுவான பிரச்னைகள், ரயில் வரும் நேரம், புறப்படும் நேரம், உணவு சம்பந்தமான குறைபாடுகள், விபத்து குறித்து தகவல் தெரிவிக்க தனித்தனியாக உதவி மைய எண்கள் வழங்கப்பட்டு இருந்தது. மேலும் ரயில்வே தொடர்பான தகவல்களை பெற 131 என்ற எண் வழங்கப்பட்டு இருந்தது. பின்னர் 139 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இணையதளம் போன்ற வசதிகள் பெருகியதையடுத்து இந்த உதவி எண்ணை மக்கள் பயன்படுத்துவது குறைய தொடங்கியது. இதனால் அந்த சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் மீண்டும் இந்த எண் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. அதைப்போன்று 182 என்ற எண்ணும் செயல்பாட்டிற்கு வருகிறது. இதையடுத்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.