ஆசையாக கொஞ்சுவதற்கு தர மறுத்ததால் 5 மாத ஆண் குழந்தையை கிணற்றில் வீசிய பெண்

தூத்துக்குடி: ஆசையாக கொஞ்சுவதற்கு தர மறுத்ததால் 5 மாத ஆண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டார். அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தூத்துக்குடி பூப்பாண்டியாபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (26). தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (24). இவர்களின் 5 மாத கைக்குழந்தை செல்வகணேஷ். இவர்களது உறவினரான பஞ்சவர்ணம் (31) என்ற மனநலம் பாதித்த பெண்ணும் கடந்த 10 நாட்களாக இதே வீட்டில் இருந்து வந்தார். செல்வராஜ் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றநிலையில், நந்தினி தனது குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்தார்.

சிறிதுநேரத்தில் தொட்டிலில் குழந்தையை காணவில்லை. அக்கம்பக்கம் தேடியபோது வீட்டின் முன்புற கிணற்றில் குழந்தை பிணமாக மிதந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த சிப்காட் போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தையை பஞ்சவர்ணம் கிணற்றில் வீசி கொலை செய்தது தெரியவந்தது. அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: எனது குழந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தாய்ப்பால் குடிக்கும்போது புரையேறி இறந்துவிட்டது. இதனால் கணவரை பிரிந்து தந்தை வீட்டில் இருந்தேன்.

அவர் கோயிலுக்கு மாலை அணிந்திருப்பதால் உறவினரான நந்தினி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இங்கு இருந்த நந்தினியின் 5 மாத ஆண் குழந்தையை பார்த்ததும் குழந்தை ஏக்கம் வந்து விட்டது. பலமுறை கேட்டும் குழந்தையை கொஞ்ச தராததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் குழந்தையை தூக்கி  கிணற்றில் வீசிவிட்டேன் என கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பஞ்சவர்ணத்தை கைதுசெய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: