குடியுரிமை திருத்த சட்டத்தை யார் எதிர்த்தாலும் தேசத்துரோகிகள்: மன்னார்குடி ஜீயர் பேட்டி

திருவில்லிபுத்தூர்: குடியுரிமை திருத்த சட்டத்தை யார் எதிர்த்தாலும் அவர்களை தேசத்துரோகிகள் என்று சொல்லலாம் என மன்னார்குடி ஜீயர் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் மன்னார்குடி செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டம் என்பது நமக்காகவும் நமது நாடு என்பதற்காகவும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை யாரும் தட்டி கேட்பதற்கு அதிகாரம் கிடையாது. இதை யார் எதிர்த்தாலும் அவர்களை தேசத்துரோகிகள் என்று நாம் சொல்லலாம். நம் நாட்டில் நமக்கு வேண்டிய சட்டங்களை நாம் இயற்றிக் கொள்ளலாம். இதை கேட்கக்கூடிய அதிகாரம் யாருக்கும் இல்லை.

நித்யானந்தா மீது தொடர்ந்து புகார்கள் உள்ளது. தற்போது கர்நாடக நீதிமன்றம், குஜராத் நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அவரை எங்கிருந்தாலும் உடனடியாக கைது செய்ய வேண்டும். நித்யானந்தா குற்றச்சாட்டை மறுக்கிறார் என்றால் குற்றம் பண்ணவில்லை என்று அனைத்து ஆதாரங்களையும் காட்டி உண்மையை நிரூபிக்க வேண்டும். அவர் கோழை மாதிரி ஒளிந்து கொண்டு நேருக்குநேர் வராமல் நமது சட்டதிட்டங்களை மதிக்காமல் இருக்கிறார். அவருடைய பாஸ்போர்ட் காலாவதி ஆனது. நமது நாட்டையும் தர்மத்தையும் மதிப்பவரானால் நமது நாட்டு சட்டப்படி அதை புதுப்பித்து கொண்டு போக வேண்டும். புதுப்பிக்காமல் நாட்டை விட்டு ஓடுவது என்பது பெரிய தேசத்துரோகம். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: