மஞ்சூர்: அரசு பேருந்தை காட்டு யானைகள் வழி மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே கெத்தை கிராமம் உள்ளது. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் கெத்தையை சுற்றிலும் உள்ள வாழை, பாக்கு மற்றும் மலைக்காய்கறி தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதுடன் அவ்வப்போது நடு ேராட்டில் நின்று வாகனங்களை வழிமறித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று கோவையில் இருந்து 40 பயணிகளுடன் அரசு பேருந்து மஞ்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. கெத்தை அருகே 18வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது எதிரே 5 காட்டு யானைகள் நடுரோட்டில் சாலையை மறித்தபடி நின்று கொண்டிருந்தன.