கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் ஒன்றியம் என்.தட்டக்கல் கிராமத்தில், இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை, புதுப்பித்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவேரிப்பட்டணம் ஒன்றியம், நாகோஜனஹள்ளி பேரூராட்சி என்.தட்டக்கல் கிராமம், மலுவராயன் தெருவில் இருளர் இன மக்களுக்காக, கடந்த 1997ம் ஆண்டு 12 தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டன. ஒவ்வொரு வீட்டிலும் 2 குடும்பம் வீதம் 45க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வீடுகள், கடந்த 10 ஆண்டுகளாக சேதமடைந்து, இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளன. வீட்டின் மேற்கூரைகளில் உள்ள சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும், சுவற்றில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மழை காலங்களில் தண்ணீர் ஒழுகுவதோடு, தரை முழுவதும் ஈரமாகி விடுகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இந்த வீடுகள் உள்ளன.