சென்னை,: தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: குடியுரிமை திருத்தச் சட்டம் சிறுபான்மை மக்கள் மத்தியில் மட்டுமின்றி அனைத்துப் பகுதி இந்திய மக்கள் மத்தியிலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து கொண்டுவரப்பட உள்ள தேசிய குடிமக்கள் ஆவணம் (என்ஆர்சி) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) காரணமாக இந்திய குடிமக்களுக்கு ஏற்படக் கூடிய இழப்பு, அதனால் நாடு முழுவதும் ஏற்படவிருக்கிற சமூக பதற்றம் ஆகியவை குறித்து பல்வேறு தரப்பினரும் எச்சரித்திருந்தனர்.