ஆவடி: ஆவடி மாநகராட்சி, பட்டாபிராம், 36வது வார்டில் ஏழை, எளிய மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்களது வீடுகளில் சுப நிகழ்ச்சிகளை தனியார் மண்டபத்தில் நடத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் பல ஆயிரம் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே கடந்த 2009ம் ஆண்டு அப்பகுதி மக்கள் சுபநிகழ்ச்சிகளை எளிமையான முறையில் நடத்திட சமுதாய கூடம் கட்டி தந்தால் பயனுள்ளதாக இருக்கும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். அதன்படி 2010ம் ஆண்டு பட்டாபிராம், மாடர்ன் சிட்டி பகுதியில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. இந்த சமுதாயக்கூடத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் சுபநிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இந்த கூடத்தை திறந்தும், மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் மூடியே வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.