பல்லாவரம்: சென்னை பல்லாவரத்தில் இருந்து திருமுடிவாக்கம் செல்லும் பிரதான சாலை வழியாக திருமுடிவாக்கம், பெரும்பதூர் உள்பட பல பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கிறது. திருநீர்மலை, திருமுடிவாக்கம் மற்றும் பழந்தண்டலம் பகுதிகளை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகளில் வசிக்கின்றவர்களும் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்கின்றவர்களும் மேற்கண்ட சாலையை பயன்படுத்துகின்றனர். இந்த சாலையில், திருமுடிவாக்கம் பகுதியில் அடையாறு ஆற்றின் குறுக்கே நெடுஞ்சாலை துறை சார்பில் பாலம் கட்டப்படுகிறது. இதனால் மக்கள் வசதிக்காக அருகில் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டு அதன் வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது. சமீபத்தில் பெய்த கன மழையாலும் அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் தற்காலிக தரைப் பாலம் நீரில் அடித்துசெல்லப்பட்டு போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் பொதுமக்களும் மாணவர்களும் கடும் அவதிப்படுகின்றனர்.