ஐயப்ப பக்தரின் மண்டை உடைப்பு : நண்பர்களுக்கு வலை

சென்னை: புழுதிவாக்கம், அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் கதிர்வேலு (35). இவர் சபரி மலைக்கு செல்வதற்காக மாலை போட்டுள்ளார். இவரது நண்பர்களான வேளச்சேரியை சேர்ந்த விஜயகுமார், பாஸ்கர் ஆகியோர் நேற்று கதிர்வேலுவை பார்க்க வந்துள்ளனர். ஏற்கனவே மது போதையில் இருந்த அவர்கள்,  தங்களுக்கு மது வாங்கி தருமாறு கதிர்வேலுவிடம் கேட்டுள்ளனர். கோயிலுக்கு மாலை போட்டு இருப்பதால்  மது வாங்கி தரமுடியாது என்று அவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும், அங்கிருந்த இரும்பு ராடால் கதில்வேலு தலையில் ஓங்கி அடித்துள்ளனர். இதில் அவரது மண்டை உடைந்தது. இதையடுத்து, இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய விஜயகுமார், பாஸ்கரை தேடி வருகின்றனர்.

* திருவொற்றியூர் பஸ் நிலையம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட திருவொற்றியூரை சேர்ந்த சிலம்பரசன் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* மேற்கு தாம்பரம் சமத்துவ பெரியார் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பெரியசாமி நடேசன் (50) நேற்று முன்தினம் திரிசூலம் ரயில் நிலையம் அருகே சென்றபோது சாலையோரம் நின்றிருந்த கார் மீது ஆட்டோ மோதி படுகாயமடைந்தார். குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி  நேற்று இறந்தார்.

* புது வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் இருந்து 3 சர விளக்குகள் மற்றும் அருகில் உள்ள கடையின் பூட்டை உடைத்து 4,500 ரூபாயை திருடிய திருவொற்றியூர் பெரியார் நகர் கிராம தெருவை சேர்ந்த   ஆட்டோ டிரைவர் விஜயகுமார் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* மாதவரம் நடராஜ் நகரில் ஆட்டோவில் குட்கா பொருட்களை கடத்தி வந்த மாதவரம், பொன்னியம்மன்மேடு, பிருந்தாவன் தோட்டம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (58) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: