சென்னை: உள்ளாட்சித் தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி மற்றும் ஊரகத் தேர்தல் நடைபெறவுள்ளது. உள்ளாட்சி மற்றும் ஊரக தேர்தல் வரும் 27 மற்றும் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் அவகாசம் நிறைவடைந்த நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் கடந்த 19ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி 27 மாவட்டங்களில் உள்ள 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு 3 லட்சத்து 2 ஆயிரம் வேட்பு மனுக்கள் பெறப்பட்டதில் 48 ஆயிரத்து 891 பேர் மனுக்களைத் திரும்பப் பெற்றுள்ளனர். மேலும் 18 ஆயிரத்து 570 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் போட்டியிருகின்றனர்.