பிரபல ரவுடி ஸ்ரீதரின் மறைவுக்கு பிறகு அதிகார போட்டியில் தொடரும் கொலைகள்: பொதுமக்கள் பீதி

சென்னை: காஞ்சிபுரத்தை கலக்கிய பிரபல ரவுடி ஸ்ரீதர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கம்போடியா நாட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் யார் தாதா? என்ற அதிகார போட்டியில் தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வருகின்றன. இது, தற்போது விரிவடைந்து திருவள்ளூர்-காஞ்சிபுரம் எல்லையான மப்பேடு வரை சென்றுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. கோயில் நகரமாகவும், பட்டு நகரமாகவும், சுற்றுலா நகரமாகவும் திகழும் காஞ்சிபுரம் தற்போது ரவுடிகளின் ராஜ்ஜியமாக மாறிவிட்டது. காஞ்சிபுரம் நகரம் முழுவதும் கஞ்சா விற்பனை, பட்டப்பகலில் பொதுமக்களிடம் வழிப்பறி, நள்ளிரவில் வாகனத் திருட்டு போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் ரவுடிகளின் அட்டகாசம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பிரபல ரவுடி ஸ்ரீதர் மறைவுக்கு பிறகு அவரது மைத்துனர் தணிகா மற்றும் ஸ்ரீதரின் கார் ஓட்டுநர் தினேஷிற்கும் இடையே நடக்கும் அதிகாரப் போட்டியில் இரண்டு கோஷ்டிகளும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி காஞ்சிபுரத்தில் நடைபெற்று வருகின்றன.

காஞ்சிபுரத்தை கலக்கிய பிரபல ரவுடி ஸ்ரீதரின் வலதுகரமாக செயல்பட்டவர் தினேஷ், தரின் இடதுகரமாக செயல்பட்டு வந்தவர் ரவுடி தணிகா. இவர்கள் இரண்டு பேர் மீதும் காஞ்சிபுரம் தாலுக்கா, பாலுசெட்டிச்சத்திரம், சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிப்பறி, கட்டபஞ்சாயத்து உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் ரவுடி தினேஷ் காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் காரில் சென்றபோது தணிகா நாட்டு வெடிகுண்டு வீசி தினேஷை கொல்ல முயற்சி செய்து கைது ஆனார். பின்னர் கடந்த 2019 செப். மாதத்தில் தணிகாவுக்காக ஆஜராகும் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த வழக்கறிஞர் சிவக்குமார் மீது தினேஷ் தரப்பினர் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து செய்யாறு பகுதியில் சதீஷ் என்பவர் ஓடும் பேருந்தில் வெட்டிக் கொலை  செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் வணிகர் வீதியில் பைனான்ஸ் அதிபர் கருணாகரன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதற்கிடையே ரவுடி தணிகா மற்றும் தினேஷ் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களின் ஆதரவாளர்கள் மூலம் யார் பெரிய தாதா? என்ற அதிகாரப் போட்டியில் சிறையில் இருந்து கொண்டே தொடர்ந்து கொலைச் சம்பவங்களை அரங்கேற்றி வருவதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாகவே நேற்று காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட எல்லையான மப்பேடு பகுதியில் பைக்கில் சென்ற சிவகாஞ்சி பகுதியைச் சேர்ந்த கோபி (19) மற்றும் சிவா (19) ஆகிய இரண்டு பேரை ரவுடி கும்பல் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்துள்ளனர். எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள எஸ்பி இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: