சென்னை: அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலையில், தமிழ் இருக்கை அமைக்க ரூபாய் 1 கோடி ஒதுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் அறிவித்திருந்தார். ரூபாய் 7 கோடி நிதி தேவைப்பட்ட நிலையில், தமிழக அரசு சார்பில் 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகள், பிற மாநில கல்வி நிறுவனங்களில் தமிழ் இருக்கை நிறுவ ஆண்டுதோறும் ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கடந்த ஆண்டு சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த கோரிக்கையின் பேரில் 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.