சென்னை: அரியலூர் மாவட்டம், மலத்தான் குளம் கிராமத்தில் சூசையப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழாவின் போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆர்த்தர் பெஞ்சமின் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கடந்த 40 ஆண்டுகளாக திருவிழாவின் போது ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. 2020 புத்தாண்டு தினத்தையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், பாதுகாப்பு கோரி காவல்துறையிடமும் அளித்த மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது மனு மீது தகுந்த உத்தரவு பிறப்பிக்குமாறு அரியலூர் கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரர் அளித்த மனுவை பரிசீலித்து, ஒரு வாரத்தில் முடிவெடுக்குமாறு அரியலூர் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.