வி.கே.புரம்: வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால், நெல்லை மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பி வழிகின்றன. தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் கடந்த 28ம் தேதி முதல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றில் அதிகபட்சமாக 20 ஆயிரம் கன அடிநீர் வரை திறந்து விடப்பட்டதால், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் பாலமும், முண்டந்துறை பாலமும் தண்ணீரில் மூழ்கியது. இதன் காரணமாக பக்தர்களின் பாதுகாப்பு கருதி சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல கடந்த 28ம் தேதி முதல் 8ம் தேதி வரை வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் 9ம் தேதி மழை குறைந்து, வெள்ளப்பெருக்கும் தணிந்ததால் காரையாறு கோயிலுக்கு அரசு பஸ்களில் செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்தனர். சொந்த வாகனங்களில் கோயிலுக்கு செல்ல 10ம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டது.