ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் குழந்தைகள் நல காப்பகத்திற்கு 70 லட்சத்தில் புதிய கட்டிடம்: போலீஸ் கமிஷனர் திறந்து வைத்தார்

சென்னை: ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் குழந்தைகள் நல காப்பகத்திற்கான புதிய கட்டிடத்தை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று திறந்து வைத்தார். சென்னை புதுப்பேட்டை, ராஜரத்தினம் விளையாட்டு அரங்க வளாகத்தில், கடந்த 2003ம் ஆண்டு பல்வேறு வசதிகளுடன் கூடிய குழந்தைகள் நல காப்பகம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டதால், ரூ.69.79 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதற்கான பணிகள் முடிந்த நிலையில், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இதனை திறந்து வைத்து, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறுகையில், ‘குழந்தைகள் நல காப்பகம் மழலையர் பள்ளியாகவும் இயங்கும், பணிக்கு செல்லும் பெண் காவலர்கள் தங்களது குழந்தைகளை இந்த காப்பகத்தில் விட்டுச் செல்லலாம். குழந்தைகளை கவனித்துக்கொள்ளவும், பாடங்கள் கற்றுக் கொடுக்கவும், நன்கு படித்த பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பராமரிப்பு பணிக்காக இரண்டு பணிப்பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் விளையாடுவதற்காக பூங்கா மற்றும் விளையாட்டு பொருட்கள் உள்ளன, என்றார். நிகழ்ச்சியில் சென்னை காவல் கூடுதல் ஆணையர் (தலைமையிடம்) ஜெயராம், இணை ஆணையர் (தலைமையிடம்) பாபு, திருவல்லிக்கேணி துணை ஆணையர் தர்மராஜன், ஆயுதப்படை துணை ஆணையர்கள் சவுந்தரராஜன், ரவிச்சந்திரன், மோட்டர் வாகனப்பிரிவு துணை ஆணையர் கேசோமசுந்தரம் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: