மகள் காதல் திருமணம் செய்ததால் விஷம் குடித்த தந்தை சாவு தாய் கவலைக்கிடம்: கூடுவாஞ்சேரி அருகே சோகம்

சென்னை:கூடுவாஞ்சேரி அடுத்த அருள் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (48). இவரது மனைவி சண்முகசுந்தரி (37). இவர்களது மகள், அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர், தன்னுடன் வேலை பார்த்து வரும் ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார்.  இதுபற்றி அறிந்த ஆறுமுகம், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மகளை கண்டித்துள்ளார். ஆனாலும், அவர்களது காதல் நீடித்தது. இதனால், மகளை தாய்மாமனுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி கடந்த மாதம் 29ம் தேதி நிச்சயதார்த்தமும் நடந்தது. இந்நிலையில், கடந்த 4ம் தேதி, ஆறுமுகத்தின் மகள், தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். அவரை பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. சில நாட்களுக்கு பிறகு, மகள் தனது காதலனை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

இதனால் மனமுடைந்த ஆறுமுகம் அவரது மனைவி சண்முகசுந்தரி ஆகியோர், கடந்த 6ம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கினர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை ஆறுமுகம் இறந்தார். சண்முகசுந்தரி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: