வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை கிராமம் சுமார் 1,200 அடி உயரம் கொண்டது. இந்த மலைமீது 150 குடும்பங்கள் கொண்ட 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மலைக்கிராமத்திற்கு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி செய்யப்படவில்லை. அதேபோல் மருத்துவம், மின்சாரம் என்று எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் கண்டிராத நிலையில் உள்ளனர். இங்கு 5ம் வகுப்பு வரை மட்டும் ஒரு பள்ளி உள்ளது. அதிலும் 3 நாட்கள் மட்டுமே ஒரு ஆசிரியர் வருவாராம். இப்படி அடிப்படை வசதிகள், இல்லாததால் இந்த மலைக்கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு யாரும் பெண் தருவதில்லையாம். இதனால் அங்குள்ள வாலிபர்களும் சென்னை, பெங்களூரு என்று வேலை தேடி சென்றுவிடுகிறார்கள். இப்படி வஞ்சிக்கப்பட்டுவரும் மலைக்கிராம மக்கள் தினமும் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.