சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக காவல் துறை சார்பில் ‘காவலன்’ செயலி அறிமுகம் செய்யப்பட்டது. காவலன் செயலி குறித்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதற்கான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் மெரினா காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் ‘காவலன்’ எஸ் ஒ எஸ் செல்போன் செயலி அறிமுக விழா நேற்று காலை நடைபெற்றது. இதில் போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் கலந்து கொண்டு ‘காவலன்’ செயலியை தொடங்கி வைத்தார். அப்போது கல்லூரி மாணவிகளிடம் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேசியதாவது: ராணி மேரி கல்லூரி அருகே டிஜிபி அலுவலகம் அமைந்துள்ளது. உங்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் முதலில் அங்கு தகவல் சென்று விடும். ‘காவலன்’ செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் அந்த பட்டனை அழுத்தினால் உடனே காவல்துறை உதவும்.