சென்னை: நதிநீர் பங்கீடு குறித்து தமிழகம் மற்றும் கேரள அதிகாரிகள் நாளை சென்னையில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். தமிழகம் மற்றும் கேரளா இடையே பல்வேறு நதிநீர் பிரச்னைகள் இருக்கிறது. குறிப்பாக, திருவாணி அணை, பரம்பிகுளம்-ஆழியாறு, ஆணைமலை ஆறு, புன்னம்புலா ஆகிய ஆறுகளின் நீர் பங்கீட்டில் பிரச்னை நீடித்து வருகிறது. இதுதவிர முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை அதிகரிப்பது தொடர்பாக தீர்வு எட்டியபாடில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என்று இருமாநில விவசாயிகளும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து பேச முன்வர வேண்டும் என்று கேரள முதல்வர் பிரனாயி விஜயனிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார். அதன்பேரில், கடந்த செப்டம்பர் 25ம் தேதி இரு மாநில முதல்வர்கள் திருவணந்தபுரத்தில் சந்தித்து பேசினர்.