சிங்கம்புணரி: சிங்கம்புணரி பாலாற்றில் நடந்து வரும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதி மக்களின் முக்கிய நீராதாரமாக பாலாறு விளங்கி வந்தது. கடந்த 15 ஆண்டுகளாக பாலாற்றில் தண்ணீரின்றி வறண்டு சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் பாலாறு கரையோர பகுதியான சிங்கம்புணரி, சிலநீர்பட்டி, காளாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து அனுமதியின்றி மணல் அள்ளுவது தொடர் கதையாக உள்ளது. இரவு நேரங்களில் மாட்டுவண்டிகளிலும், டிராக்டர்களிலும் மண் அள்ளப்பட்டு வருகிறது.
ஆற்று பகுதிகளில் 15 அடி ஆழம் வரை மணல் அள்ளப்பட்டு பள்ளமாக உள்ளதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. மணல் அள்ளுபவர்கள் மீது சாதாரண பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்வதால் தவறுகள் தொடர்கின்றன. தேத்தான்காடு, காளாப்பூர் எஸ்.வி. மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் போர்களில் தண்ணீர் இன்றி மக்கள் தண்ணீருக்காக அலைந்து அவதியடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.