தேனி: தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படித்த மாணவன் உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மேலும் 5 மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் கைது செய்யப்பட்டனர்.தேனி சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் இந்த வழக்கில் கைதான மாணவர்கள் 5 பேருக்கும் ஐகோர்ட் மதுரை கிளை ஜாமீன் வழங்கியது. பெற்றோர் சரவணன், டேவிஸ், வெங்கடேசன், முகமதுசபி ஆகிய 4 பேருக்கும் தேனி நீதித்துறை நடுவர் மன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் சென்னை, கோபாலபுரத்தை சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமாரின் மகன் ரிஷிகாந்தும் ஆள்மாறாட்டம் செய்து தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் மாணவருக்கு ஜாமீன் வழங்கிய ஐகோர்ட் மதுரை கிளை, அவரது தந்தை ரவிக்குமாருக்கு ஜாமீன் வழங்க மறுத்து சிபிசிஐடி போலீசிடம் சரணடைய அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து ரவிக்குமார் நேற்று பிற்பகல் தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் சித்ரா முன் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.