மயிலாடுதுறை: தருமபுர ஆதீனம் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது.நாகை மாவட்டம் தருமபுர ஆதீனம் 500 ஆண்டுகளுக்கு முன்பு குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த ஆதீனத்தின் 26வது சன்னிதானமாக ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள்12.11.71ல் பதவியேற்றுக் கொண்டார். மதுரை ஆதீனத்திற்குள் நித்யானந்தாவை இளைய சன்னிதானமாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவரது தலைமையில் தருமபுரத்தில் அனைத்து ஆதீனங்களும் கூடி தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. 96 வயதான ஆதீனம் சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர், திருவையாறு குமாரசாமி தம்பிரானை 1.2.2017ல் மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகளாக திருநாமம் மாற்றி இளைய சந்நிதானமாக்கினார். கடந்த 2ம்தேதி மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு தஞ்சை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார், நினைவு திரும்பாமலேயே நேற்று மதியம் 2.40 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல் 5.40 மணிக்கு மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பக்தர்கள் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று அவரது இறுதி சடங்கு ஆதீனம் மேலவீதியில் உள்ள முன்னாள் ஆதீனங்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடைபெற உள்ளது. அதன்பிறகு இளைய சந்நிதானமாக உள்ள மாசிலாமணிதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் 27வது ஆதீனமாக பொறுப்பேற்கிறார்.