சென்னை: சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் பழனிகுமார் மறைவுக்கு பிறகு உறவினர்கள் உள்ளிட்ட எந்த ஆதரவும் இல்லாமல் தவித்த மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகளுக்கு சக காவலர்கள் வழங்கிய 22 லட்சம் நிதியை முதல்வர் எடப்பாடி வழங்கினார். கடந்த மாதம் 20ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் பழனிகுமார் மனைவி விமலாவுக்கு, சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் பணியாளர்களின் மூலமாக திரட்டப்பட்ட 22 லட்சத்து 7 ஆயிரத்து 700 ரூபாய்க்கான காசோலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் வழங்கினார். அப்போது, சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் விஸ்வநாதன், காவல்துறை கூடுதல் ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) தினகரன் ஆகியோர் உடனிருந்தனர். விபத்தில் மறைந்த காவலர் பழனிகுமார், சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்தவர். ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து, படித்து காவல் துறைக்கு வந்துள்ளார். அவரது மனைவி விமலாவுக்கும் கணவர் பழனிகுமாரை தவிர வேறு எந்த சொந்தமும் இல்லை.பழனிகுமார் கடந்த 2003ம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் இணைந்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் நுண்ணறிவு பிரிவில் பணிபுரிந்து வந்தார். அவருக்கு மூன்று பெண் குழந்தைகள்.