அம்பத்தூர்: அம்பத்தூர் பஸ் நிலையத்தில் நாய்கள், மாடுகள் சுற்றித்திரிவதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அம்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, புறநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 300க்கு மேற்பட்ட பஸ்கள் சென்று வருகின்றன. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த அரசு, தனியார் ஊழியர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். சமீப காலமாக இந்த பஸ் நிலையத்தில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இதில், சில மாடுகள் பயணிகளை முட்டுகின்றன. இதனால் பயணிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். இவை இருக்கை பகுதி மற்றும் நிலையத்தை சுற்றியுள்ள இடங்களிலும் ஆங்காங்கே சாணத்தை போட்டு செல்கின்றன. இதனால் பயணிகள் பேருந்து நிலையத்தில் நடமாட முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் பேருந்து நிலையத்தில் நிற்க முடியாத நிலை உள்ளது.