தண்டையார்பேட்டை: சவுகார்பேட்டையில் வாடகை பாக்கி செலுத்தாத கட்டிடத்திற்கு அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். சவுகார்பேட்டை வள்ளியம்மன் கோயில் தெருவில் 300 ஆண்டுகள் பழமையான அருணாச்சலேஸ்வரர் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அந்த பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ளன. அதன்படி, சவுகார்பேட்டை தங்க சாலையில் இந்த கோயிலுக்கு சொந்தமான 2 ஆயிரத்து 472 சதுர அடி நிலம் உள்ளது. இந்த இடத்தில் தனிநபர் ஒருவர் இனிப்பு கடைகளுக்கு, பொருட்கள் தயாரிப்பதற்காக கோயிலிடம் வாடகைக்கு எடுத்து, அதில் 3 மாடிக் கட்டிடம் கட்டி இனிப்பு வகைகள் தயாரித்து வந்தார். இந்த நிலையில், இந்த இடத்திற்கு பல வருடங்களாக வாடகை செலுத்தாமல் இருப்பது தெரியவந்தது. கோயில் நிர்வாகம் வாடகை செலுத்த கோரி பலமுறை அறிவிப்பு நோட்டீஸ் கொடுத்தும் அவர் வாடகை பாக்கியை செலுத்தவில்லை, என கூறப்படுகிறது.