டாஸ்மாக் கடை சுவரை துளையிட்டு மதுபாட்டில்களை அள்ளி ஆற்றில் வீச்சு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

சீர்காழி: பூம்புகாரில் டாஸ்மாக் கடை சுவரை துளையிட்டு உள்ளே புகுந்து மது பாட்டில்களை அள்ளி ஆற்றில் வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாகை மாவட்டம் பூம்புகார் பழைய அகரம் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது.  நேற்றுமுன்தினம் இரவு இந்த கடையின் சுவரை துளையிட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், மது பாட்டில்களை கடையின் உள்ளேயே உடைத்து சேதப்படுத்தினர். மேலும் கடைக்கு வெளியே பாட்டில்களை கொண்டு வந்து சாலையில் உடைத்தும்,  அருகில் உள்ள காவிரி ஆற்றில் வீசியும் சென்றுள்ளனர். மொத்தம் 200 பீர் பாட்டில்கள், 100 குவார்ட்டர் பாட்டில்கள் சேதமாகி உள்ளது. உடைக்கப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு சுமார் ரூ.35,000 ஆகும்.

அதோடு டாஸ்மாக் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் மானிட்டர், அலாரத்தையும் மர்ம நபர்கள் எடுத்துச் சென்று விட்டனர். டாஸ்மாக் கடையில் பணம் எதுவும் திருட்டு போகவில்லை. டாஸ்மாக் கடையில் ஏராளமான  மதுபான வகைகள் இருந்தும் அதனை மர்ம நபர்கள் திருடி செல்லவில்லை. எனவே மதுவுக்கு எதிரானவர்களே பாட்டில்களை உடைத்து சென்றிருக்கலாம் என போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. பாட்டில்களை உடைத்த மர்ம நபர்களை  போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: