கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வீடுகள் இடிந்து விழுந்து உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் உயரிழிந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார். கோவையில் கனமழையின் காரணமாக மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியி்ல் வீடுகள் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயரிழந்துள்ளனர். மேலும் சிலரை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் மழையால் வீடுகள் இடிந்ததில் பெண்கள், சிறுமி உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்து பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணி மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 10 பெண்கள், 2 குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.