அரியலூர்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அரியலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர் மழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளனர். அரியலூர் அருகே உள்ள முடியங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரது மகள் பூங்கோதை. மாற்றுத்திறனாளியான இவர் இன்று காலை வீட்டிற்கு செல்வதற்கு சந்து வழியாக சென்று கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக அவர் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் இடர்பாடுகளில் சிக்கிய அவர் சடலமாகவே மீட்டெடுக்கப்பட்டார். மழையின் காரணமாக காடுவெட்டி மெயின்ரோடு தெருவை சேர்ந்த ஞானசேகர், மணிகண்ணன், கண்ணையன், சம்பந்தம் ஆகியோரின் குடிசை சுவர்கள் இடிந்து விழுந்தன.