தாம்பரம்: தி.நகரில் இருந்து நேற்று பயணிகளுடன் கிழக்கு தாம்பரம் புறப்பட்ட மாநகர பேருந்து (த.எ.வி51) வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையில் ஐ.ஏ.எப். சாலை சந்திப்பு அருகே சென்றபோது, முன்னால் சென்ற கார் மீது வேகமாக மோதியது. இதில் காரின் பின்பகுதி சேதமடைந்தது. இதில் காரில் இருந்த 6 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர். பின்னர், காரில் வந்தவர்கள் மற்றும் பஸ் டிரைவர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பஸ் டிரைவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பஸ் டிரைவர் மது அருந்தி இருக்கிறாரா என இயந்திரம் மூலம் சோதித்து பார்த்தபோது, 81 எம்.ஜி. அளவு அவர் மது போதையில் இருந்தது உறுதியானது.
விசாரணையில், அவர் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த அருள் (40) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.