சென்னை: வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் சோதனை ஓட்டம் நடைபெறும் என மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தற்போது 45.1 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் முதல் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் நீட்டிப்பான வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.1 கி.மீ தூரத்தில் மெட்ரோ ரயில் பணிகள் ரூ.3 ஆயிரத்து 770 கோடியில் நடைபெற்று வருகிறது. இவ்வழித்தடத்தில் மொத்தம் 9 ரயில் நிலையங்கள் அமைய உள்ளது. இதில், சர் தியாகராயர் கல்லூரி, கொருக்குப்பேட்டை நிலையங்கள் மட்டும் சுரங்கப்பாதையில் அமைய உள்ளது. நீட்டிப்பு பணிகளை விரைவில் முடிக்கும் வகையில் அதிநவீன கட்டுமான இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தநிலையில், இப்பணியை பிப்ரவரி மாததிற்குள் முடிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 2020 பிப்ரவரி மாதம் பணிகளை முடித்து ஏப்ரல் மாதம் இவ்வழித்தடத்தில் சோதனை ஓட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. பின்னர், ஜூன் மாதம் வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் சேவையை தொடங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.