திருப்பூர்: கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்தது தெரியாமல் 500, 1000 கொண்ட 46 ஆயிரம் செல்லாத ரூபாய் நோட்டுக்களுடன் மூதாட்டிகள் தங்களது கண்புரை அறுவை சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், பூமலூர் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் ரங்கம்மாள் (75), தங்கம்மாள் (78). இவர்கள் இருவரும் சகோதரிகள். இவர்களின் கணவர்கள் இறந்துவிட்டனர். இதனால் மூதாட்டிகள் தங்களது மகன்கள் வீட்டில் வசித்து வருகின்றனர். 2 பேருக்கும் கண் சரிவர தெரியாததால், இருவரும் கண் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் கண்புரை உள்ளது. இதற்கு அறுவை சிகிச்சை செய்ய பணம் செலவாகும் என கூறியுள்ளனர். அப்போது பண மதிப்பு நீக்க விவகாரம் தெரியாமல் பல ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த ரங்கம்மாள் 24 ஆயிரம், தங்கம்மாள் 22 ஆயிரம் பணத்தை குடும்பத்தினரிடம் கொடுத்துள்ளனர். அந்த நோட்டுகள் அனைத்தும், செல்லாத 500, 1000 நோட்டுகளாகும். இதனை பார்த்த மூதாட்டியின் குடும்பத்தினர் கடும் வேதனையடைந்தனர்.