சரளமாக ஆங்கிலத்தில் பேசுவது எப்படி? அரசு பள்ளி மாணவர்கள் பயிற்சி

சென்னை: மாணவ-மாணவிகள் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் வகையில் தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் சரளமாக ஆங்கிலம் பேசும் திறன் உள்ளதாக பெரும்பாலான பெற்றோர் நினைக்கின்றனர். இதனால் தனியார் பள்ளிகளை நோக்கி செல்கின்றனர்.இந்நிலையில் அந்த நம்பிக்கையை மாற்றும் வகையிலும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையிலும் அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை  கடந்த அக்டோபர் மாதம்  உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் பயிற்சி புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

* 1 முதல் 5ம் வகுப்பு வரை வாரத்துக்கு 90 நிமிடத்துக்கு 2 பாடவேளையும் பயிற்சி அளிக்க வேண்டும். அப்போது 10 நிமிடங்கள் காணொலியும், 40 நிமிடங்கள் மாணவர்களுக்கான ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சியும் நடத்த வேண்டும்.

* ஆங்கிலப்பாட ஆசிரியர்கள், மாணவர்களுக்கான பயிற்சி கட்டத்தை பூர்த்தி செய்து அந்தந்த பருவ இறுதியில் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் கையெழுத்து வாங்க வேண்டும்.

* 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புக்கு வாரத்துக்கு 45 நிமிடத்துக்கான ஒரு பாடவேளையில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி அளிக்கும் வகையில் அட்டவணை தயாரிக்க வேண்டும்.

* ஆங்கில பயிற்சி கற்பித்தல் வகுப்புகளை அந்தந்த மாவட்டங்களின் கண்காணிப்பு அலுவலரான இணை இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

Related Stories: