பெரும்பான்மை இல்லாமல் முதல்வராக பதவி ஏற்றிருக்கக்கூடாது: தேவேந்திர பட்னாவிஸ் ராஜினமா செய்தது சரியே...மம்தா கருத்து

கொல்கத்தா: மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகள் உத்தவ் தாக்கரேவே முதலமைச்சராக இருப்பார் என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் - அஜித் பவார் இணைந்து ஆட்சியமைத்ததற்கு எதிராக சிவசேனா -  தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. வழக்கு விசாரணையில் தங்களுக்கே பெரும்பான்மை இருப்பதாக இருதரப்பும் வாதிட்டனர். ஆனால், பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க 14  நாட்கள் ஆளுநர் அவகாசம் அளித்துள்ளதால் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று வாதிட்டது.

ஆனால், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சிவசேனா உள்ளிட்ட மூன்று கட்சிகளும் ஒன்றாக கோரிக்கை விடுத்தன. இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிமன்றம், நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை  வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. வாக்குச்சீட்டு முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி, அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், இன்று மாலைக்குள் தற்காலிக சபாநாயகரை தேர்வு  செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, தற்காலிக சபாநாயகர் மூலமாக நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்தார். அதேபோல, உச்சநீதிமன்றம்  விதித்த கெடுவுக்கு 24 மணி நேரம் முன்னதாகவே முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸ் விலகினார். பட்னாவிஸ் ராஜினாமாவால் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராவது உறுதியானது.

இந்நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினமா செய்தது சரியே என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். பெரும்பான்மை ஆதரவு இல்லாத பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்  முதல்வராக பதவியே ஏற்றிருக்கக்கூடாது என்றும் தெரிவித்தார். மேலும், நான் ஒருபோதும் ஆளுநருடன் சண்டையிட்டதில்லை, அவர் ஏன் இந்த நிலைமையை உருவாக்குகிறார்? என்று கேள்வி எழுப்பினார். ஆர்டர்கள் எங்கிருந்து வருகின்றன  என்பது எங்களுக்குத் தெரியும். பிரதமர் கூட என்னுடன் இப்படி நடந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைப்பது தொடர்பாக இன்று கவர்னரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக  பதவியேற்கவுள்ளதாகவும், துணை முதல்வராக தேசியவாத காங்.,சின் ஜிதேந்திர அவத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: