மானாமதுரை: மானாமதுரை பகுதியில் பகல், இரவு நேரங்களில் திடீரென பெய்யும் சாரல் மழையால் அகல்விளக்கு தயாரிக்கும் பணி முடங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கீழ்கரை குலாலார் தெருவில் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் உள்ளனர். இவர்கள் எந்திரங்கள் உதவியால் திருவையில் மண்ணை இட்டு கையால் கலைநயமிக்க பூந்தொட்டி, மண்பானை, குடிநீர் ஜக்குகள், பனியார சட்டிகள், தட்டுகள், அம்மன் கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்தப்படும் அக்னிசட்டிகள், ஆயிரம்கண்பானைகள் உள்ளிட்ட மண்பாண்ட பொருட்களை தயார் செய்து வருகின்றனர். சீசனுக்கு தகுந்தவாறு பல்வேறு மண்பாண்டங்களை தயார் செய்து தென்மாவட்டங்கள் முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். கார்த்திகையை முன்னிட்டு அகல்விளக்குகள் தயாரிப்பது வழக்கம். கடந்த சில நாட்களாக பகல், இரவு நேரங்களில் திடீரென பெய்து வரும் சாரல் மழையால் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.