வத்திராயிருப்பு : ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின்பேரில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், பக்தர்களின் அடிப்படை வசதிகள் குறித்து 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் அடிப்படை வசதி குறித்து, கமிட்டி அமைத்து ஆய்வு செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது.இதன்பேரில், வன உயிரின பாதுகாப்பு கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உதயன் தலைமையில், வனப்பாதுகாவலர் தினகர்குமார், வனஉயிரின காப்பாளர் முகமது ஜபாத், இந்து சமய இணை ஆணையர் குமாரத்துரை, வத்திராயிருப்பு வனச்சரக அலுவலர் கோவிந்தன், கோயில் செயல் அலுவலர் விஸ்வநாத் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து சதுரகிரி கோயில் வரை நேற்று ஆய்வு செய்தனர்.