சென்னை: பட்டாசு தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மறு நிர்ணயம் செய்ய குழு அமைத்து தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு 1948ம் ஆண்டு இயற்றிய குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின்படி பல்வேறு தொழில்களுக்கு காலத்திற்கு ஏற்ற வகையில் குறைந்தபட்ச ஊதியம் மாற்றியமைக்கப்படுகிறது. இந்த தொழில்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறைந்த ஊதியம் மறு நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் 2018-2019ம் ஆண்டில் 25 தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 19 தொழில்களுக்கு மறுநிர்ணயம் செய்யும் பொருட்டு முதல்நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டாசு சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை மறு நிர்ணயம் செய்து தொடர்பான குழுவை அமைத்து தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி மதுரை மண்டல தொழிலாளர் துறை இணை ஆணையர் தலைவராகவும், விருதுநகர் மாவட்ட செயலாக்க பிரிவு உதவி ஆணையர் (செயலாக்கம்), விருதுநகர் செயலாளராகவும், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை சிவகாசி கோட்ட உதவி இயக்குநர் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.