சென்னை: தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி உறவையூரி கிராமத்தில் ஏ அண்ட் எப் என்ற ஷூ தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இதில் பணியாற்றிய பலருக்கு கடந்த ஜூலை 2000லிருந்து 2001 நவம்பர் வரை பிராவிடண்ட் பண்ட் பணத்தை நிறுவனம் செலுத்தவில்லை. இதையடுத்து, அந்த தொழிலாளர்களுக்கான பிராவிடண்ட் பணத்தை கட்டுமாறு பிஎப் உதவி ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, நிறுவனம் மண்டல ஆணையரிடம் மேல் முறையீடு செய்தது. மேல்முறையீட்டை விசாரித்த மண்டல ஆணையர் உதவி ஆணையரின் உத்தரவை உறுதி செய்தார். இதையடுத்து, நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல், சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் பயிற்சியாளர்கள்தான், அவர்கள் ஊழியர்கள் இல்லை என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த உத்தரவில், ஊழியர்களுக்கு பிஎப் பணத்தை வழங்க வேண்டும் என்ற மண்டல ஆணையரின் உத்தரவு சரிதான். எனவே, நிறுவனம் அந்த பணத்தை ஊழியர்களின் பிஎப் கணக்கில் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டார்.